
காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை என்பது வெறும் நிர்வாக ஆவணங்களில் பதிவாகியுள்ள ஒரு சாதாரண விடயமாகக் கருதப்பட முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான குடும்பங்களின் துயரங்களும், நீண்டகால எதிர்பார்ப்புகளும், தீராத வேதனைகளும் இந்த விவகாரத்துடன் பின்னிப்பிணைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். எனவே, இவ்விடயத்தை மனிதாபிமான உணர்வுடனும் பொறுப்புடனும் அணுக வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மாலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி நிலையத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்வின் ஆரம்பத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த இணையவழி மூலம் இணைந்து வரவேற்புரையையும் நிகழ்ச்சியின் நோக்கங்கள் தொடர்பான விளக்கத்தையும் வழங்கினார்.
மேலும், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அனுப்பியிருந்த விசேட செய்தியும் நிகழ்வில் வாசிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் உணர்வுகளை மதித்து, அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஆளுநர் தனது உரையில் வலியுறுத்தினார்.

