
பிள்ளையானின் பெயரில் எழுதப்பட்டுள்ள 'ஈஸ்டர் படுகொலை' புத்தகத்தின் 'சூத்திரதாரி' ரொஹான் குணரத்னவா?
- - - - - - - - - - - - - - - - -
தாக்குதலில் பின் பல சிறையில் பிள்ளையானை சில தடவைகள் சந்தித்திருக்கிறார்.
- - - - - - - - - - - - - - - - -
பிள்ளையானின் புத்தகத்தில் குணரத்னவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது
- - - - - - - - - - - - - - - - -
ஈஸ்டர் தாக்குதல் பற்றி பிள்ளையானின் பெயரில் தமிழில் எழுதப்பட்டு பின்னர் சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட புத்தகத்தின் பின்னணியில் உள்ள 'சூத்திரதாரி' பிரபல்யமான 'சர்வதேச தீவிரவாத நிபுணர்' பேராசிரியர் ரொஹான் குணரத்ன என்று பலத்த சந்தேகத்தை எழுப்பக்கூடிய தகவல்கள் தற்போது அம்பலமாகி வருகின்றன.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், ரொஹான் குணரத்ன பல தடவைகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு போய் சிறையில் இருந்த சிவநேசத்துறை சந்திரகாந்தன் எனப்படுகின்ற பிள்ளையானை சந்தித்து நீண்ட நேரம் உரையாடியதாக தற்போது தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஈஸ்டர் தாக்குதல் எந்த வேறு வெளி சக்திகளின் தொடர்பும் இல்லாமல் நேரடியாக ISIS வழிகாட்டலின் கீழ் நடந்தது என்று பிள்ளையான் வாயிலாக சொல்விப்பதே இந்த சந்திப்புகளின் முக்கியமான நோக்கம் என்று தோன்றுகின்றது.
ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னரும் பிள்ளையானை சந்திப்பதற்கு மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு ரொஹான் குணரத்ன சென்றதாக உறுதிப்படுத்தப்படாத மூலங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளதுடன், அது பற்றி விசாரணைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பிள்ளையானை தெரிவு செய்தது ஏன்?
- - - - - - - - - - - - - - - - -
இந்தக் கதையை சொல்வதற்கு குணராத்த உட்பட்ட குழு பிள்ளையானை தெரிவு செய்தது அறிவார்ந்த ரீதியிலும் தந்திரமாகவும் நடந்துள்ளது என்று அதன் பின்னணி தகவல்களை ஆய்வு செய்யும் பொழுது தெளிவாகின்றது.
2015ல் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையானுக்கு, ஈஸ்டர் தாக்குதலின் தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரான் குழுவின் உறுப்பினர்கள் சிலரை சிறையில் அறிமுகமாகியது 2017ல் தான். எட்டு பேரைக் கொண்டு ஸஹரானின் குழு ஒன்று காத்தான்குடி அலியார் சந்தியில் ஏற்பட்ட மோதல் ஒன்று காரணமாக அதே சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. அதில் சஹரானின் சகோதரர் ஒருவரான ஸைனி (முஹம்மது காஸிம் முஹம்மது ஸைனி) உம் அதில் இருந்ததுடன், பிள்ளையான் உடன் நெருக்கமான நட்பையும் ஏற்படுத்திக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸைனி க்கும் பிள்ளையானுக்கும் இடையிலான தொடர்பு பற்றி உணர்வுபூர்வமான வாக்கியங்கள் சிலவும் பிள்ளையானின் புத்தகத்தில் 'ஆய்வின் ஆரம்பம்' என்ற தலைப்பில் வருகின்றது.
"... எங்களோடு சிறையிலிருந்து விடுதலையான ஸைனி மௌலவி போன்றவர்கள் அதில் தொடர்பு பட்டிருந்ததும், அங்கு ஸைனி மௌலவி கொல்லப்பட்டது எனக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்தது..."
"...ஸைனி மௌலவி சிறையில் இருந்த போது அவருடன் நட்பாக கதைத்துக் கொண்டிருந்த நாட்களை நினைவுபடுத்தும் பொழுது அசூசையான உணர்வு ஏற்படுகின்றது."
தாக்குதலின் பின்னர் காத்தான்குடி போன்ற பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டவர்களும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களுடனும் கதைத்து தகவல்களை சேகரிப்பதற்கு தமக்கு வாய்ப்புக் கிடைத்தது என்றும் பிள்ளையான் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கதையை சொல்வதற்கு பிள்ளையானுக்கு உள்ள தகுதி மேற்படி தகவல்கள் ஊடாக உருவாக்கப்பட்டுள்ளது.
பிள்ளையானின் தொடர்புகளை 'உளவுப் பிரிவு' தெரிந்து வைத்திருந்தது
- - - - - - - - - - - - - - - - -
2016 வரை உளவு இயக்குனரகத்தின் (intelligence directorate) தலைவராகவும் பின்னர் மலேசியாவில் இலங்கை தூதரகத்துடன் இணைந்தும் பணியாற்றிய மேஜர் ஜெனரல் சுரேஷ் ஸலே உள்ளிட்ட குழு ஒன்றுக்கு பிள்ளையானுக்கும் ஸஹரானுக்கும் இடையிலான தொடர்பை அறிந்து கொள்வதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் இரண்டு வழிகளில் வாய்ப்பு இருக்கின்றது.
முதலாவதாக, பிள்ளையானும் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்காக அவருடனே கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த கலீல் மற்றும் பிரதீப் மாஸ்டர் என்பவர்கள் உளவுப் பிரிவின் ரகசிய சம்பள பட்டியலின் கீழ் இருந்தவர்கள் என்பதால் அவர்கள் மூலம் இந்தத் தகவலை பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்து.
அடுத்ததாக பிள்ளையானின் பிரத்தியேக செயலாளராக இருந்த ஹன்ஸீர் அசாத் மௌலானா வழியாக தகவல்கள் பெற்றுக் கொள்வதாகும். அவர் பிரித்தானியாவின் செனல் 4 ஊடகத்தில் தெரிவித்த கருத்துக்கள், மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பித்த பிரமாண பத்திரங்களுக்கு ஏற்ப சுரேஷ் ஸலேக்கு நேரடியாக அவரிடம் இது பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்தது.
ஆசாத் மௌலானாவின் மேற்படி வாக்குமூலங்கள் பற்றி விரிவான விசாரணைகளை ஆரம்பித்தால், இது சம்பந்தமான உறுதியான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கும்.
அதன்படி, ஈஸ்டர் தாக்குதலில் தற்கொலை குண்டு தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய உறுப்பினர்கள் உட்பட ஸஹரான் குழுவினரின் உறுப்பினர்ளுடன் நெருக்கமான தொடர்பை வைத்திருந்த, தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுடனும் உரையாடிய பிள்ளையான், ஸஹரான் உட்பட்ட குழு உடன் ISIS நேரடி தொடர்பை வைத்திருந்ததாகவும் அந்தத் தொடர்பு வழியாக ISIS வழிகாட்டுதலின் கீழ் தாக்குதல் நடந்ததாகவும் சொல்வதற்கு மிகப் பொருத்தமானவர் இவர் தான் என்று முடிவெடுத்தமை மூலோபாய ரீதியாக புத்திசாலித்தனமான தெரிவாகும்.
குணரத்ன பற்றி பிள்ளையானின் புத்தகத்திலிருந்து
- - - - - - - - - - - - - - - - - -
பிள்ளையாரின் புத்தகத்தின் சிங்கள மொழிபெயர்ப்பில் 'ஆய்வின் ஆரம்பம்' என்ற தலைப்பின் கீழ் வரும் குறிப்பில் குணரத்ன உடனான சந்திப்பை விசேஷமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
"... அதுபோலவே சர்வதேச தீவிரவாத மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவரான பேராசிரியர் ரொஹான் குணரத்னவும் படுகொலையின் பின்னர் சிறைக்கு வந்து என்னுடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார். IS துணைக் குழுக்களின் செயல்பாடுகள், மட்டக்களப்பு சூழலின் பின்னணி, வன்முறை, மதவாதம், தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஈடுபடுகின்றவர்களின் உளவியல் பின்னணி மற்றும் பல தலைப்புகள் பற்றி அப்போது கலந்துரையாடினோம்..."
பிள்ளையானின் புத்தகத்தை எழுதி வெளியிடும் செயற்திட்டத்தின் திட்டமிடல் மற்றும் வழிகாட்டல் ரொஹான் குணரத்தின உடையது என்பதற்கு இந்தக் குறிப்பு பலமான சாட்சி ஒன்றாகும்
புத்தகத்தை எழுதியது பிள்ளையானே தானா?
- - - - - - - - - - - - - - - - -
பிள்ளையான் என்பவர், கெரில்லா போர் முறை, ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவை பற்றி யுத்த களத்தில் அனுபவரீதியாக சேர்த்துக்கொண்ட அறிவை உடைய ஒருவர். ஆனால் அவர் தமிழ் மொழியில் பெறுமதியான எதையும் எழுதும் ஆற்றல் உடையவர் அல்ல. எழுதுவது எப்படிப் போனாலும் ஆழமான அரசியல் தகவல்களைப் பற்றி உரையாடும் ஆற்றல் கூட அவருக்கு இல்லை என்பது அவரைப் பேட்டி கண்ட ஊடகவியலாளர்களுக்குத் தெரியும்.
அதன்படி ரொஹான் குணரத்தினவின் வழிகாட்டல், தகவல் வழங்குதல், உட்பட இயக்கத்தின் கீழ் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கின்றது என்ற பலமான சந்தேகம் உருவாகியுள்ளதுடன் அது பற்றி விசாரணைகள் நடக்கும் என்று தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன. பல தடவைகள் பிள்ளையானை சந்திக்க சென்றதன் ஊடாக, புத்தகத்துக்கு மேலதிகமாக ரொஹான் குணரத்ன நிறைவேற்றிக் கொண்ட விடயங்கள் என்ன என்பது பற்றியும் விசாரணைகளில் தெரியவரும் என்று எதிர்பார்க்கலாம்.
விசாரணை நடக்கும் போது வெளியே வரும் பூதம்
- - - - - - - - - - - - - - - - -
தீவிரவாதம் பற்றிய சர்வதேச நிபுணர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ரொஹான் குணரத்ன என்பவர், ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தப்பட்ட விசாரணைகளில் முன்னேற்றம் ஒன்று ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தாக்குதலின் பின்னணியில் சதித்திட்டம் ஒன்று இருந்தது என்பதை சந்தேகிக்கும் அளவிற்கு நியாயமான தகவல்கள் வெளிப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பூதம் ஒன்று போல தோன்றி மிகவும் சந்தேகம் ஏற்படும் வகையில் நடந்து கொள்பவர். கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த பாதுகாப்பு கற்கைகளுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாக 2001இல் நியமிக்கப்பட்டவர்.
உண்மையில் ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் மறைந்து இருக்கின்ற ராணுவ உளவுப் பிரிவு உட்பட சதிக்குழுவை காப்பாற்றுவதற்காக தொடர்ந்தும் முன் நிற்கின்ற ஒருவர்தான் அவர் என்பதற்குறிய பலமான காரணங்கள் அவதானிக்கப்பட்டு கொண்டு வருகின்றன. கடந்த மூன்று வாரங்களாக, மறுபடி தோன்றி, ஈஸ்டர் தாக்குதலின் எல்லா ரகசியங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் விசாரணை செய்வதற்கு எதுவும் இல்லை என்றும், விசாரணை செய்பவர்கள் உட்பட பலரும் சுட்டிக்காட்டுகின்ற சிக்கலான இடங்கள் அனைத்தும் முழுமையாக விசாரிக்கப்பட்டு அவிழ்கப்பட்டுள்ளதாகவும் சொல்லிக் கொண்டிருப்பது இதற்கான மிகச் சிறந்த உதாரணமாகும். தற்போது அவருடைய அரங்கேற்றம், ஈஸ்டர் தாக்குதலுக்கு மிகவும் முக்கியமாக இருக்க முடியுமான கைது ஒன்றும் நிகழ்வதற்கு நெருக்கமான நிலையில் ஆரம்பித்தமை இந்த சந்தேகத்தை மிகவும் வலுப்படுத்துகின்றது.
இந்தத் தடவை அவர் தோன்றியிருப்பது எந்த பின்னணியில் என்பதையும், அவர் முன் வைக்கும் தர்க்கங்களில் உள்ள போலித் தன்மையையும் எதிர்காலத்தில் விளக்கமாக எழுதுவோம்.
ரொஹான் குணரத்ன அணி எதை நோக்கி வருகிறது
- - - - - - - - - - - - - - - - -
ரொஹான் குணராத்னவை முன்னணியில் நிறுத்தி உருவாக்கிக் கொண்டிருக்கும் திரைப்படத்தின் முக்கியமான இலக்கு, தற்போது ஈஸ்டர் தாக்குதல் பற்றி நடக்கின்ற விசாரணைகள் தொடர்பாக எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நீதிமன்ற விசாரணைகளில் பங்குபற்றும் நீதிபதிகள் உட்பட தீர்க்கமான சக்திகளுக்கு செல்வாக்கு செலுத்த முடியுமான பின்னணி ஒன்றை உருவாக்கிக் கொடுத்தல் என்று தெளிவாகின்றது. அதற்காக, தீவிரவாத செயல்கள் பற்றி சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிஞர் ஒருவர் தான் ரொஹான் குணரத்ன என்ற தகவலை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவது இந்த குழப்பக்காரர்களின் முயற்சியில் உள்ளடங்குகின்றது. ஆனால் அவர் 'சர்வதேச நிபுணர்' தானா என்பது ஏற்கனவே கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அது பற்றிய புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: பிள்ளையான் இந்த புத்தகத்திற்கு முன்னர் இன்னொரு புத்தகம் எழுதி இருக்கின்றார் என்பது எழுத்தாளரின் அவதானத்திற்கு உட்படவில்லை என்று தெரிகிறது. ஆனால் பிள்ளையான் எழுதிய முதல் புத்தகமும் யாரால் எழுதப்பட்டிருக்க முடியும் என்ற கேள்வி நிலவுகின்றது.
புத்தகத்தில் இருந்த பகுதிகள் இதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அவை எதுவும் தமிழ் மொழி மூலமான புத்தகத்திலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டவை அல்ல. சிங்கள மொழி கட்டுரையில் குறிக்கப்பட்டிருந்த பந்திகள் மொழிபெயர்ப்பாளரால் மொழிபெயர்க்க முயற்சிக்கப்பட்டுள்ளது. மூல நூலில் உள்ள வசன அமைப்புகளுடன் இந்த மொழிபெயர்ப்பு சற்று வேறுபட வாய்ப்பிருக்கின்றது.